எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

தாழ குனிதல்

தனது சிறிய மிதிவண்டியை, தனது சிறிய கால்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு வேகமாய் மிதித்து, ஓட்டிக்கொண்டிருந்த தன்னுடைய மகளை அந்த இளம் தாய் பின்தொடர்ந்தாள். ஆனால் அவள் நினைத்த வேகத்தை விட அதிக வேகமெடுக்கவே, கட்டுப்பாடின்றி மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த சிறுமி, தனது கணுக்காலில் காயம் பட்டதென்று அழுதாள். அவள் தாயோ அமைதியாய் அவளருகே மண்டியிட்டு, தாழக் குனிந்து, கணுக்காலில் முத்தமிட்டாள் (வலி சரியாகிவிடுமாம்!). ஆச்சரியம்! அந்த சிறுமி குதித்தெழுந்து, மிதிவண்டியில் ஏறி மீண்டும் ஓட்ட ஆரம்பித்தாள். நமது வலிகளும்கூட இப்படி இலகுவாய் மாறினால் எவ்வளவு நலமாயிருக்கும்!

அப்போஸ்தலன் பவுல் தனது தொடர்ச்சியான உபத்திரவங்களின் மத்தியில் தேவனுடைய ஆறுதலை அனுபவித்ததால், அவரால் தொடர்ந்து முன்னேற முடிந்தது. 2 கொரிந்தியர் 11:23–29 இல், அவர் சந்தித்த உபத்திரவங்களில் சிலவற்றைப் பட்டியலிடுகிறார்: அடிகள், கசையடிகள், கல்லெறியப்படுதல், தூக்கமின்மை, பட்டினி, சபைகளைக் குறித்த கவலை. அவர் தேவன், "இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார்" (1:3) என்பதை மிகநெருக்கமாக அறிந்துகொண்டார்.  இதையே மற்றுமொரு மொழிபெயர்ப்பு, "தேவன், மென்மையான அன்பைத் தரும் தகப்பன்' என்கிறது. அந்த தாய் தன் குழந்தையை தேற்றியதுபோல; தேவனும் நமது வேதனையின் மத்தியில் தாமே கீழே குனிந்து மென்மையாய் நம்மைப் பராமரிக்கிறார்.

தேவன் அன்பாய் தேற்றுகிற வழிமுறைகள் பலவாயும், வித்தியாசமானதுமாய் உள்ளன. நாம் தொடர்ந்து முன்னேற தமது வசனத்தின்மூலம் நம்மை ஊக்குவிப்பார் . நண்பர்கள் மூலமோ, யாராகிலும் மூலமோ நம்மோடு விசேஷித்தவிதமாக பேசி, நமது ஆவிக்கு ஆறுதலளிப்பார். நமது உபத்திரவங்கள் ஓயாததுதான், ஆனால் தேவன் கீழே குனிந்து நமக்கு உதவுவதால், நாம் மீண்டும் எழுந்து, ஓட துவங்கலாம்.

ஆக்கப்பூர்வமான விசுவாசம்

2021 ஜூன் மாதம், மாலை நேரத்தில் ஒரு சமூகத்தில் சூறாவளி புயல் வீசியது. அது அங்கிருந்த ஒரு குடும்பத்தினரின் கொட்டகையை அழித்தது. அது 1800ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் குடும்ப சொத்தாக இருந்ததினால், அதின் அழிவு அவர்களுக்கு சோகத்தை வருவித்தது. ஜானும் அவருடைய மனைவியும் அடுத்த நாள் காலை தேவாலயத்திற்குச் செல்லும் வழியில், காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் அந்த சேதத்தைப் பார்த்து, எப்படி அவர்களுக்கு உதவ முன்வரலாம் என்று யோசித்தனர். ஏற்பட்டிருக்கிற அந்த சேதாரத்திலிருந்து முதலில் அவைகள் சுத்தம்செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்தனர். உடனே தங்கள் காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு, உடை மாற்றிக்கொண்டு, புயல் காற்றின் மூலமாய் அந்த வீட்டில் ஏற்பட்ட சேதாராத்தை சுத்தம் செய்ய துவங்கினர். அந்த குடும்பத்தினருக்கு உதவிசெய்ததின் மூலம், அவர்களுடைய விசுவாசத்தை ஆக்கபூர்வமான விசுவாசமாய் மாற்றினர். 

“கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” (யாக்கோபு 2:26) என்று யாக்கோபு சொல்லுகிறார். அதற்கு ஆபிரகாமின் உதாரணத்தை காண்பிக்கிறார். அவர் எங்கு செல்கிறார் என்று தெரியாதபோது கீழ்ப்படிதலுடன் தேவனைப் பின்தொடர்ந்தார் (வச. 23; பார்க்க ஆதியாகமம் 12:1-4; 15:6; எபிரெயர் 11:8). எரிகோ பட்டணத்தை வேவு பார்க்க வந்த வேவுக்காரர்களை தன் வீட்டில் மறைத்து வைத்து, இஸ்ரவேல் தேவன் மீது தனக்கிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திய ராகாபையும் யாக்கோபு உதாரணப்படுத்துகிறார் (யாக்கோபு 2:25; பார்க்க, யோசுவா 2; 6:17).

“ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?” (யாக்கோபு 2:14). “விசுவாசமே வேர், நற்கிரியைகளே பலன்; இரண்டும் நம்மிடம் இருக்கும்படிக்கு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மேத்யூ ஹென்றி குறிப்பிடுகிறார். நம்முடைய நற்கிரியைகள் தேவனுக்கு தேவையில்லை; ஆனால் நம்முடைய விசுவாசம் நற்கிரியைகளின் மூலமாகவே நிரூபிக்கப்படுகிறது.

தேவனை நேசித்து சார்ந்து கொள்ளுதல்

சுனில், வேடிக்கையான, புத்திசாலித்தனமான, எல்லோராலும் விரும்பப்படத்தக்கவன். ஆனால் அவன் மனவிரக்தியில் இருந்தது யாருக்கும் தெரியாமற்போயிற்று. அவன் தன்னுடைய 15ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்ட பின்னர், அவனுடைய தாயாராகிய பிரதீபா, “நாம் அதிகம் விரும்பும் ஒருவர் இப்படிச் செய்ததை கிரகிப்பது மிகவும் கடினமாயிருக்கிறது. சுனில்... அந்தத் தவறான முடிவிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவில்லை” என்று கூறுகிறார். பிரதீபா, பல நாட்கள் தனிமையில் தன்னுடைய வேதனையை தேவனிடத்தில் ஊற்றியிருக்கிறாள். தன்னுடைய மகனுடைய தற்கொலைக்குப் பின்னர், “ஒரு வித்தியாசமான துயரத்தை நான் அனுபவித்தேன்” என்று சொல்லுகிறாள். ஆனால், அவளும் அவள் குடும்பத்தினரும், அந்த மீளா துயரத்தின் மத்தியிலும், தேவனை சார்ந்து கொள்வது எப்படி என்று கற்றுக்கொண்டனர். தற்போது, மனச்சோர்வுக்குள்ளாகும் நபர்களைத் தேடி அவர்களை நேசிக்கவும், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உதவுகின்றனர். 

“நேசித்து சார்ந்து கொள்” என்பதே பிரதீபாவின் இலட்சியமாகும். இதே கருத்தை, பழைய ஏற்பாட்டில், ரூத்தின் சரித்திரம் எடுத்துரைக்கிறது. நகோமி தன்னுடைய கணவனையும் இரண்டு குமாரர்களையும் இழந்து நிற்கதியாய் நின்றாள். அவள் குமாரனில் ஒருவனைத்தான் ரூத் மணந்திருந்தாள் (ரூத் 1:3-5). கசப்பானவளாய் விரக்தியிலிருந்த நகோமி, ரூத்தை அவளுடைய இனத்தாரிடத்திற்கு திரும்பிப் போய் சுகமாயிருக்கும்படி. கேட்டுக்கொண்டாள். தன் கணவனை இழந்த விரக்தியிலிருந்த ரூத்தோ, தன் மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டு, அவளைப் பராமரித்தாள் (வச. 14-17). இருவரும் நகோமியின் சொந்த ஊரான பெத்லெகேமுக்கு வந்தனர். ரூத்துக்கு அது அந்நிய தேசமாயிருந்தது. ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் அன்பாயிருந்து, தேவனை சார்ந்திருந்தனர், தேவன் அவர்களின் தேவையை சந்தித்தார் (2:11-12). 

நம்முடைய துயரங்களில், தேவனுடைய அன்பு நமக்கு நிலையானதாக இருக்கிறது. நாம் எப்போதும் தேவனை சார்ந்து கொள்ள அவர் நம்மோடிருக்கிறார். தேவன்  மற்றவர்களை தேற்றவும் நம்மை பெலப்படுத்துவார். 

பிழைத்து வளர்கிறது

ஒரு ஆங்கில அனிமேஷன் திரைப்படம் ஒன்றில், ஒரு குகை மனிதன் குடும்பம், “ஒன்றாக இருந்தால் மட்டுமே உயிர்வாழ்வதற்கான ஒரே வழி” என்று நம்புகிறது. அவர்கள் உலகத்தைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் பயப்படுகிறார்கள். எனவே அவர்கள் வாழ பாதுகாப்பான இடத்தைத் தேடும்போது அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏற்கனவே ஒரு விசித்திரமான குடும்பத்தைக் கண்டுபிடித்த பிறகு அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் விரைவில் தங்கள் புதிய உறவினரின் வேறுபாடுகளைத் தழுவிக்கொள்ளவும், அவர்களிடமிருந்து வலிமையைப் பெறவும், ஒன்றாக வாழவும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த உறவில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதும், வாழ்க்கையை முழுமையாய் வாழுவதற்கு மற்றவர்களும் தேவை என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.

நல்ல உறவில் இருப்பது ஆபத்தானது. மக்கள் நம்மை அவ்வப்போது காயப்படுத்தலாம். ஆயினும்கூட, நல்ல நோக்கத்திற்காய், தேவன் தம் மக்களை திருச்சபை என்னும் ஒரே சரீரமாய் ஏற்படுத்துகிறார். மற்றவர்களுடன் ஐக்கியம் கொள்வதில், நாம் முதிர்ச்சி அடைகிறோம் (எபேசியர் 4:13). தாழ்மை, சாந்தம் மற்றும் பொறுமை (வச. 2) ஆகிய நற்குணங்களுக்காய் அவரை சார்ந்திருக்கிறோம். நாம் ஒருவரையொருவர் “அன்பில்” கட்டியெழுப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவுகிறோம் (வச. 16). நாம் ஒன்று கூடும்போது, நம்முடைய தாலந்துகளைப் பயன்படுத்துகிறோம்; மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். இது தேவனுடன் நடக்கவும், அவருக்காக சேவை செய்யவும் நம்மை ஊக்கப்படுத்துகிறது.

அவர் உங்களை நடத்துகையில், தேவ ஜனத்தின் மத்தியில் உங்களுடைய இடத்தை இன்னும் நீங்கள் கண்டுபிடியாதிருப்பீர்கள் என்றால், அதை கண்டுபிடியுங்கள். சாதாரணமாய் வாழ்வதை விடுத்து, பகிரப்பட்ட அன்பில் நீங்கள் தேவனுக்கு கனத்தை கொடுப்பீர்கள். மேலும் இயேசுவைப் போல மாறுவீர்கள். இயேசுவுடனும் மற்றவர்களுடனும் வளர்ந்து வரும் உறவின் மூலம் நாம் அனைவரும் அவரைச் சார்ந்து ஜீவிப்போம்.

மற்றவர்களுடன் நடப்பது

பில்லி, ஒரு அன்பான மற்றும் விசுவாசமான நாய். 2020 இல் இணையதள நட்சத்திரமாக மாறியது. அதின் உரிமையாளர் ரஸ்சல் கணுக்கால் உடைந்து, ஊன்றுகோலைப் பயன்படுத்தி நடந்துகொண்டிருந்தார். பில்லியும் அதின் உரிமையாளருடன் நடக்கும்போது நொண்டி நடக்க தொடங்கியது. கவலையடைந்த ரஸ்சல், பில்லியை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் நாய்க்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கூறினார்! அது தானாக நடக்கும்போது நன்றாகவே நடக்கிறது. அது தன் உரிமையாளருடன் நடக்கும்போது மட்டும் போலியாக நொண்டுகிறது என்று கண்டறிந்தனர். இதைத்தான் மற்றவர்களுடைய வலியை உணருவது என்று நாம் அழைக்கிறோம்.

ரோம திருச்சபைக்கு பவுல் அப்போஸ்தலரின் ஆலோசனைகள் முன்னிலைப்படுத்தப்படுகிறது. பத்துக் கட்டளைகளில், கடைசி ஐந்து கட்டளைகளை அவர் சுருக்கிக் கூறுகிறார்: “உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (ரோமர் 13:9). 8ஆம் வசனத்திலும் மற்றவர்களுடன் நடப்பதன் முக்கியத்துவத்தை நாம் பார்க்கலாம்: “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்.”

எழுத்தாளர் ஜென்னி ஆல்பர்ஸ் அறிவுரை கூறுகிறார்: “ஒருவர் உடைந்திருக்கும்போது, அவர்களை சரிசெய்ய முயற்சிக்காதீர்கள் (அது உங்களால் முடியாது). யாராவது வேதனையிலிருக்கும்போது, அவர்களின் வலியைப் போக்க முயற்சிக்காதீர்கள் (அது உங்களால் முடியாது). மாறாக, அவர்களுடைய வலியில் அவர்களை நேசித்து, அவர்களோடு சேர்ந்து நடக்க முயற்சியுங்கள் (அது உங்களால் முடியும்). ஏனெனில் சில சமயங்களில், அவர்கள் தனியாக இல்லை என்பதை உணர்த்துவதே மக்களுக்கு அவசியமான ஒன்று.”

நம்முடைய இரட்சகராகிய இயேசு, நம்முடைய காயங்கள் மற்றும் வேதனைகளில் நம்மோடு நடப்பதால், மற்றவர்களுடன் நடப்பது என்றால் என்ன என்பதை நம்மால் அறியமுடியும்.

வீட்டிற்காக ஏங்குதல்

“ஆனி ஆஃப் கிரீன் கேபிள்ஸ்” என்ற கதையின் முக்கிய கதாபாத்திரமான ஆனி, குடும்பத்திற்காய் ஏங்கினாள். அநாதையாக்கப்பட்ட அவளுக்கு வீடு திரும்பும் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் வயது முதிர்ந்த மாத்யூ மற்றும் அவருடைய சகோதரி மரில்லா ஆகிய இருவரும் அவளுக்கு ஆதரவு கரம் நீட்ட ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் வீடு திரும்பும் பாதையில் ஆனி, தான் அதிகம் பேசியதைக் குறித்து அவரிடத்தில் மன்னிப்புக் கோரினாள். “நீ எவ்வளவு வேண்டுமானாலும் பேசு, எனக்கு ஆட்சேபனையில்லை” என்று மாத்யூ பதிலளித்தார். இந்த வார்த்தைகள் ஆனியின் காதில் தேனை பாய்ச்சியது. அவளை யாரும் விரும்பமாட்டார்கள், அவள் பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள் என்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் வீடு சேர்ந்தவுடன், அவர்களின் 'வீட்டு பண்ணை வேலைக்கு ஒரு சிறுவன்தான் வரப்போகிறான்' என்று அவளுடைய சகோதரர்கள் எண்ணியதை அறிந்து, அவளுடைய நம்பிக்கை சிதைகிறது. அவளை திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்று அவள் அஞ்சினாள். ஆனால், அவளை அவர்களுடைய குடும்பத்தின் அங்கத்தினராய் ஏற்றதால், அன்பான குடும்பத்திற்காய் ஏங்கிய ஆனியின் கனவு நனவாகிறது.
நாம் விரும்பப்படாதவர்களாகவும், தனிமையானவர்களாகவும் உணர்ந்த தருணங்கள் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் கிறிஸ்துவிலுள்ள இரட்சிப்பால், தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினராய் சேர்ந்தபோது, அவரே நமக்கு பாதுகாப்பான வீடாக மாறினார் (சங்கீதம் 62:2). அவர் நம்மில் களிகூர்ந்து, நம்முடைய கவலைகள், சோதனைகள், வேதனைகள், மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து அவரிடம் பேச அழைக்கிறார். "நாம் தேவனில் இளைப்பாறுதல் அடைய முடியும்”, “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்” என்றும் சங்கீதக்காரன் கூறுகிறார் (வச. 5,8).
தயக்கம் வேண்டாம். தேவனிடத்தில் எவ்வளவு பேச விரும்புகிறீர்களோ, பேசுங்கள். அவர் தவறாய் நினைக்கமாட்டார். அவர் நம் மனதை குறித்து மகிழ்கிறார். அவரில் உங்களுக்கொரு அடைக்கலத்தை கண்டுகொள்வீர்கள்.

அசையாத விசுவாசம்

தன் தகப்பனுடைய மரணத்திற்குபின், அவருடைய உடைமைகளைத் திரும்பப் பெற அருண், அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்திற்குச் சென்றான். அதின் பணியாளர், அவனிடம் இருப் பெட்டிகளை ஒப்படைத்தார். மகிழ்ச்சியாய் இருப்பதற்கு அதிக சொத்துத் தேவையில்லை என்பதை அன்றுணர்ந்தேன் என அருண் கூறினான். 

அவன் தந்தை சதீஷ், எவரையும் புன்னகையுடன் வரவேற்று, கவலையற்ற எளிய வாழ்வு வாழ்ந்தவர். மற்றவர்களை எப்போதும் ஊக்கப்படுத்துகிறவர். அவருடைய மகிழ்ச்சிக்கு காரணம், அந்த பெட்டிக்குள் வைக்க முடியாது வேறொரு "சொத்து" அவரிடம் இருந்தது: அவருடைய மீட்பராகிய இயேசுவின் மீதான அசைக்க முடியாத விசுவாசமே அது. 

“பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” (மத்தேயு 6:20) என்று, இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார். வீடு, வாகனம் மற்றும் ஆஸ்தி ஆகியவைகளை நாம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. ஆனால் நம்முடைய இருதயத்தின் நோக்கம் அவைகளையே பற்றியிருக்கக் கூடாது என்கிறார். சதீஷின் பற்று எதிலிருந்தது? மற்றவர்களை நேசிப்பதின் மூலம் தேவனை நேசிப்பதில் இருந்தது. அவர் வசித்த அந்த அறைக்குள் மேலும், கீழுமாக நடந்துச்சென்று பார்ப்பவர்களையெல்லாம் வாழ்த்தி உற்சாகப்படுத்துவாராம். யாரேனும் அழுதுகொண்டிருந்தால், அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்கும், அவர்களின் மனக்குமுறலைக் கேட்பதற்கும், அவர்களுக்காய் ஜெபிப்பதற்கும், இவர் அங்கேயிருப்பாராம். தேவனை மகிமைப்படுத்துவதிலும், மற்றவர்களுக்கு உதவிசெய்வதிலும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். 

தேவனையும், மற்றவர்களையும் நேசிப்பதிலிருந்து நம்மை திசைத்திருப்பும் அற்பமான உலககாரியங்களால் நாம் மகிழ்ச்சியடைய முடியுமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (வச. 21). நாம் எதை அதிகமாக மதிக்கிறோம் என்பதை நாம் வாழும் விதமே பிரதிபலித்துவிடும்.

விசுவாசத்தில் வாழுதல்

மோகித் நடக்கும்போது, அவரால் சமநிலையில் சரியாக நடக்க இயலாத காரணத்தால் அவருடைய மருத்துவர் அவருக்கு சில உடற்பயிற்சி சிகிச்சைகளை பரிந்துரைத்தார். ஒருமுறை அவருடைய சிகிச்சையாளர் அவரிடம், "நீங்கள் எதை பார்க்கிறீர்களா அதையே அதிகமாக நம்புகிறீர்கள் அது தவறாக இருந்தாலும் கூட அதைத்தான் நம்புகிறீர்கள் எனேவே நீங்கள் உங்களுடைய உடலின் மற்ற அமைப்புகளை சார்ந்துகொள்வது இல்லை, ஏனெனில் நடக்கும்போது உங்கள் பாதத்தின் கீழ் நீங்கள் என்ன உணர்கிறீர்களோ மேலும் உங்கள் அகச்செவி உண்டாக்கும் உள்ளுனர்வுகளும் கூட நீங்கள் சமநிலையாய் நடப்பதற்கு உதவுகின்றன." என்றார்.

"நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதையே அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள்" இது ஒரு இளம் ஆடு மேய்ப்பனாக கோலியாத்தை எதிர்த்த தாவீதின் கதையை எனக்கு நினைவுபடுத்துகிறது. நாற்பது நாட்களாக பெலிஸ்தியரின் மிகச்சிறந்த வீரனான கோலியாத், இஸ்ரவேலின் ராணுவத்திற்கு முன்பாக கொக்கரித்துக் கொண்டு, தன்னோடு சண்டையிடும்படி யாரையாகிலும் அனுப்புமாறு அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தான் (1சாமுவேல் 17:16). ஆனால் ஜனங்கள் இயல்பாக எதை கவனித்தார்களோ, அதுவே அவர்களுக்கு அச்சத்தை வருவித்தது. அப்பொழுதுதான் இளம் தாவீது அங்கே வருகிறார் ஏனெனில், அவருடைய தந்தை அவர் மூத்த சகோதரர்களுக்கு உணவுகளை வழங்குமாறு அவரை அங்கே அனுப்பியிருந்தார் (வ.18).

 இந்த சூழ்நிலையை தாவீது எப்படி பார்த்தார்? அவர் தன்னுடைய பார்வையை கொண்டல்ல, மாறாக தேவன்மேல் கொண்ட நம்பிக்கையில் அதை பார்க்கிறார். அவரும் ஒரு ராட்சதனை பார்த்தார், ஆனால் தேவன் தம்முடைய ஜனங்களை விடுவிப்பார் என்பதை உறுதியாய் நம்பினார். அவர் சிறுவனாய் இருந்த போதிலும் சவுல் ராஜாவிடம், "இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; ... நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் " என்றார் (வ.32). பின்பு கோலியாத்திடம் "யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்" என்றார் (வ.47) அதைத்தான் தேவன் செய்தார்.

தேவனுடைய குணாதிசயத்தையும், வல்லமையையும் நாம் நம்புவது அவரோடு கூட பார்வையில் அல்ல விசுவாசத்தில் நெருங்கி வாழ உதவும்.

அன்பான தேவன்

ஒரு பேராசிரியர் வழக்கமாக தன் ஆன்லைன் வகுப்பு இரண்டு விதமாக நிறைவுசெய்வார். அவர், “அடுத்தமுறை சந்திப்போம்” அல்லது “ஒரு நல்ல வாரயிறுதியை அனுபவியுங்கள்” என்று நிறைவுசெய்வார். சில மாணவர்கள், “நீங்களும் அவ்வாறே செய்யுங்கள், நன்றி!" என்று வாழ்த்துவார்கள். ஒருநாள் ஒரு மாணவர் பதிலுக்கு, “நான் உம்மை நேசிக்கிறேன்” என்றானாம். அவர் ஆச்சரியத்துடன், “நானும் உம்மை நேசிக்கிறேன்!” என்று பதிலளித்தாராம். அவனோடு கூட படிக்கும் மாணவர்கள் அனைவரும், அடுத்த ஆன்லைன் வகுப்பு நிறைவுறும்போது அவ்வாறே சொல்லுவதற்கு தீர்மானித்தனர். சில நாட்களுக்கு பிறகு அவர் பாடம் நடத்திய பின் ஒவ்வொரு மாணவர்களும் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று வாழ்த்தினார்களாம். மாதக்கணக்காய் இந்த வழக்கத்தை அவர்கள் கடைபிடித்தனராம். ஆசிரியர் இந்த “நான் உம்மை நேசிக்கிறேன் சங்கிலி” ஒரு பலமான பிணைப்பை அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையே உருவாக்கியதால், அவர் அந்த வகுப்பை தன்னுடைய குடும்பமாய் கருதுகிறார். 

1 யோவான் 4:10-21ல், நாம் தேவனுடைய குடும்பமாய் இருப்பதால், அவரிடம் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று சொல்ல பல காரணங்கள் இருக்கின்றன: அவர் தம்முடைய குமாரனை நம் பாவத்திற்கான பலியாகக் கொடுத்தார் (வச. 10). அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை நம்முள்ளே வாசம்பண்ண அனுமதித்திருக்கிறார் (வச. 13, 15). அவருடைய அன்பு நம்பகமானது (வச. 16). நாம் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்து ஒருபோதும் பயப்படத் தேவையில்லை (வச. 17). “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால்” (வச. 19) அவரையும் மற்றவர்களையும் நேசிக்க உதவுகிறார். 

அடுத்த முறை தேவ ஜனத்தோடு கூடும்போது நீங்கள் ஏன் தேவனை நேசிக்கிறீர்கள் என்ற காரணங்களை பகிர்வதற்கு நேரம் செலவழியுங்கள். “நான் உம்மை நேசிக்கிறேன்” என்ற சங்கிலியை தேவனுக்காய் உருவாக்கி, தேவனை துதியுங்கள்; தேவனோடு இன்னும் கிட்டிச் சேருங்கள்.